Sunday, July 24, 2016

அர்சகரும் காப்பியை ருசித்துவிட்டு அருகில் இருந்த சொம்பிலிருந்து தீர்த்தத்தை சரித்து ஆசமனம் செய்து தன் மேல் வேஷ்டியால் துடைத்துவிட்டு சம்பாஷணையை தொடரந்தார் . என் பாட்டி மாமாவின் வருகையை அறிவித்து பாம்பு பஞ்ஞாங்கத்தை அவர் கையில் கொடுத்து இவா தாத்தாவின் திதி என்னிக்கு வருகிறது பார்க்கா, என்று தன் கோரிக்கையை முன்வைத்தார். அவரும் மூக்கு கண்ணாடியை துடைத்து விட்டுக்கொண்டே கிருஷ்ணபக்ஷ சதுர்திதானே என்று கேட்டுவிட்டு பக்கங்களை புறட்டினார்.புரட்டாசி மாசம் எட்டாம் தேதி வருவதாகக் கணித்தார்.

அதன்பின் அவரது கோரிக்கை, உங்க மச்சினரிண்ட சொல்லி சந்தானத்துக்கு பாங்குலே ஒரு உத்யோகத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லுங்கோ என்று முத்தாய்பு வைத்தார்.

பாட்டி அதற்கு, அவர் வரச்சே சொல்லி அனுப்பரேன் நீங்களும் புள்ளையாண்டானை அழச்சுண்டுவந்து பாருங்கோ எல்லாம் நல்லபடியா முடியும் என்று சொன்னார். சந்தானம் அவரது மூன்றாவது பையன் பிஎஸ்ஸி முடித்துவேலை தேடிக்கொண்டிருந்தான்.

பத்மாசனி எப்படி இருக்கா இது பாட்டியின் கேள்வி, அதற்கு அவர் இவன் கவலைதான் அவளுக்கு, இவனுக்கு பகவான் ஒரு வழிகாட்டிடான்னா பூமாவிற்கு வரனைத்தேடலாம் என்று முடித்தார். பாட்டி அதற்கும் ஒரு பதில் தயாராக வைத்திருந்தாள். யாருக்கு பிராப்தம் இருக்கோ அவாளுக்கு மொதல்ல நடக்கும் நீங்க வரச்சே அவ ஜாதகத்தையும் கையோட எடுத்துண்டு வாங்கோ நம்படவா பசங்க எத்தனையோ பாங்கு வேலேல சேர்ந்து கல்யாண வயசுலே இருப்பாளே என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது எப்படி என்பதை நினைவூட்டினார்.

பத்மாசனி அவர் மனைவி. இப்படியாக அவர் கிளம்பியவுடன், வீட்டுப் பெரியவர்கள் சிறிது நேரம் குட்டித்தூக்கம் போட ஆயத்தமாயினர். என் தலக்கொசர கடடையை செத்த கொண்டுவாடா, இந்த வாசப்படிங்கிட்ட நன்னாஜில்லுன்னு காத்து வரது, இது பாட்டியின் அன்புக்கட்டளை. மற்றவரும் ஊஞ்சல், ஈஸிசேர் என கிடைத்த இடத்தில் உறக்கத்தின் சொந்தமானார்கள்.மெல்லிய குறட்டையின் தனி ஆவர்தனங்களை கேட்க முடிந்தது. நானும் தூக்கம் வராமல் தாழ்வாரத்தில் உள் மல்லிகை கொடியில் லேட்டாக வந்து தேனைத்தேடும் பட்டாம்பூச்சியை வேடிக்கை பார்த்து நேரத்தைக் கழித்தேன்.




Wednesday, May 11, 2016

கதை சொல்லிப்பார்தேன் மூன்றாம் பகுதி.....

மதியம் இரண்டு மணிக்கு சரியாக வீட்டில் காப்பிக்கடை திறந்துவிடும்! பாட்டி எங்கள் சமையல் அறையில் உள்ள காப்பி கவுண்டரில் கும்பகோணம் டிகிரி காபி தயாரித்து அதை கவுண்டரின் அரைச்சுவரில் வைப்பார்கள் அதை நாங்கள் எடுத்து வந்து கூடத்தில் அல்லது ஊஞ்சலில் அமர்ந்து குடிப்பது வழக்கம். சில நாட்களில் சூடாக வறுத்த நிலக்கடலை, குணுக்கு, அல்லது தவலை அடை போன்ற ஏதோ ஒன்று கிடைக்கும் பாக்கியமும் உண்டு!

சிறிது நேரம் சென்றதும் எல்லாமே துரித கதியில் நடைபெறத் துவங்கும். எதிர்த்த வீட்டு மாமி, பக்கத்து வீட்டு பார்வதியம்மாள், பின் தெருவில் இருக்கும் வீரம்மாள், சன்னதிதெரு குருக்களாத்து மாமி என்று இப்படி சிலர் வருகை தந்ததும் என் அம்மா, பாட்டி ஆகியோர் படு பிசியாகி ஊர் நிலவரம் அலசப்படும், அதில் என் பாட்டிக்கு பிடித்தமான, கொட்டகையில் ஓடும் சினிமாவைப்பற்றியும் செய்திகளும் உண்டு.  அப்பொழுதே அவர்களின் வார இறுதி ப்ரொக்ராமையும் உறுதிப்படுத்திக் கொள்வார்கள்! ஆனால் அன்று அவர்களது சந்திப்பு விரைவாகவே முடிவடைந்தது! காரணம் எங்கள் ஊர் ராமர் கோயில் அர்ச்சகர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்! அவருக்கு பாட்டி முதலில் கைகளில் ஜலம் விட்டு பிறகு சூடான காப்பியையும் கொடுத்தார்! 

Wednesday, March 16, 2016


பூர்வீகம் இரண்டாம் பகுதி......

நான் கும்பகோணத்திலிருந்து திருபுவனம் வழியாக ஆடுதுறை செல்லும் பேருந்தில் அமர்ந்து நடத்துனரிடம் திருபுவனத்திற்கு ஒரு பயணச்சீட்டு பெற்றுக்கொண்டு காலியான இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.  திருபுவனத்தைப் பற்றிய நினைவுகளில் அமிழ்ந்தேன். பேருந்தும் நகர்ந்தது!

அது ஒரு அமைதியான கிராமமாகத்தான் இருந்தது.  பட்டுப் புடவைக்கு பேமஸ், அதன் கடைத்தெருவில்தான் பேருந்துகள் நிற்கும்.  அங்கு போஸ்டாபீஸ், ஒரு பாய் டீக்கடை அதன் அருகில் ஒரு பலசரக்குக் கடை, அருகாமையில் ஒரு துணிக்கடை பாஷ்யம் அய்யங்காரால் நடத்தப்பட்டது. பக்கத்தில் ஒரு காய்கறிக்கடை.  எதிர் வரிசையில் சொக்கலிங்கம் பிள்ளையின் பாண்டுரங்க பஜனை மடம், அதன் அருகில் பஞ்சர் ஒட்டப்படும் என்ற சிலேட்டு தொங்கவிடப்பட்ட ஒரு சைக்கிள் கடை.

இவ்வளவுதான் கடைத்தெரு! அதன் மூலையில் வேலியின் பாதுகாப்பில் வயதான சிவன்கோயில் தேர்! அதைச்சுற்றி அருகில் இருக்கும் கிராமத்திலிருந்து வந்த வயதான ஒரு மூதாட்டி கொண்டுவந்த முளைக்கீரை வாழைக்காய், வாழைப்பூ, அவரை, பாகற்காய், வாழைத்தண்டு சகிதமாய் தரையிலேயே தனது பல்பொருள் அங்காடியை நடத்தி கொண்டிருந்தாள். அவள் அருகிலேயே சற்று தள்ளி சொர்கம் புகுந்த மீன்களும் வரிசையாக அடுக்கப்பட்டு விசிறியின் காற்றை உணராமல் மீளா உறக்கத்தில் உறங்கின.

இரண்டு மூன்று ஆடுகள் டீக்கடையில் ரசிகர்கள் வீசும் வாழைபழத்தோலுக்காக ஆவலுடன் காத்திருந்தன. திருபுவன வாசிகள் பதட்டப்படாதவர்கள் என்றே தோன்றியது, சிலர் ஒரு கையில் புகையுடன் மறு கையில் டீகிளாஸ் ஏந்தி,  தொங்கவிடப்பட்ட செய்திச்சுருக்கத்தை அசைபோட்ட வண்ணம் ஆழ்ந்திருந்தனர். மற்றும் சிலர் வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவி மீதத்தை அங்கிருந்த மூங்கிலுக்கு பூசி மகிழ்ந்தனர். இருவர் வாழைப்பழ தாரிலிருந்து பழங்களைப் பிய்த்து அதன் தோலை அருகில் ஆவலுடன் அவர்களையே  பார்த்துக்கொண்டிருந்த ஆடுகளுக்கு கொடுத்து தருமம் சம்பாதித்தனர்!  அப்போது ஒண்ணா நம்பர் ஆடுதுறை பேருந்து பலத்த ஓசையுடன் வந்து நின்றது! அனைவர் கண்களும் பேருந்தை நோக்கி திரும்பின!

இறங்கியவரில் பலர் ஊர்வாசிகளுக்கு புதியவர் அல்ல என்றே எனக்குத் தோன்றியது ! அவர்கள் நின்றுகொண்டிருந்தவர்களிடம் குசலம் விசாரித்துவிட்டு  தன் நடையைக்கட்டினர். வேறுசில புதியவர் பட்டுப் புடவை வாங்க வந்திருந்தனர். அவர்களுக்கு முன்பே கடைகளின் பெயர்கள் பரிச்சயம் போல் தெரிந்தது. அவர்களுக்கு ஊர்வாசிகள், வழிகாட்டி தங்கள் ஆலோசனையும் இலவசமாக கொடுத்தனர். தங்கள் சம்பாஷணைக்கு நடுவே வாயில் போட்ட வெற்றிலைச்சாற்றை தாரளமாக ரோட்டில் பரப்பினர்!

நானும் அதே பேருந்திலிருந்துதான் இறங்கி எனது வீட்டை நோக்கி நடையைக்கட்டினேன்.வழியில் சாலையின் இருபுறமும் வண்ணக்கோலங்களில் பட்டு நூல் நீட்டப்பட்டு நீவிவிடப்பட்டது! ஆடவரும் பெண்டிரும் குழந்தைகளுடன் இதில் ஈடுபட்டிருப்பதைப் பார்துக்கொண்டே நடந்தேன். என்ன இப்பத்தான் ஊர்லேந்து வரியா? என்ற கேள்வி சரமாறியாக எழுந்தது! நானும் அலுக்காமல் பதில் அளித்துக்கொண்டே நடந்தேன்!

ஒருவழியாக வீட்டு வாசலுக்கு வந்து சேர்ந்த்தேன்.  காவேரி எங்கள் வீட்டில் அம்மாவின் வேலைகளில் உதவும் மூதாட்டி அந்த வயதிலும் வாயிலில் சாணத்தை தெளித்து லாவகமாக பெரியதோர் மாக்கோலம் இடுவதை சற்று நேரம் வியப்புடன் பர்த்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன். சென்னைக்கும் இந்த ஊருக்கும் என்ன ஒரு வேறுபாடு? சென்னையில் மக்கள் எதையோ தேடித் தேடி ஓடுகின்றனரோ?  இந்த எண்ணம் என் மனத்தில் நிழலாடியது.
உள்ளே நுழைந்ததும் அம்மாவின் குரல் என்னை எண்ண ஓட்டத்தை விடுத்து  யதார்தத்துக்கு திருப்பியது.

ஏண்டா இப்படி கறுத்து போய் இருக்க? இது என் பாட்டியின் கேள்வி? என் வீட்டாருக்கு நான் அரவிந்த்சாமி போல் கலராய் இருக்கிறேன் என்ற நினைவாய் இருக்கலாம்! அப்பா எப்போதும் வார்தைகளை அளந்தே பேசுபவர் அதனால் அவர் கேட்டது எத்தனை மணிக்கு பஸ் ஏறினே என்ற கேள்வி மட்டுமே! அப்போதுதான்  ராமசாமிக் கோனார் உள்ளே நுழைந்தார். என்னைப் பார்த்து என்ன பெரிய தம்பியா வந்திருக்க என்ற கேள்விக்கணை தொடுத்தார். எங்களை அப்படித்தான் பாகுபாடு செய்து தரம் பிரித்திருந்தனர்.  இதன் இடையில் அம்மா என்னை அவசரப்படுத்தினாள், கிடுகிடுன்னு போய் சூடா ஒரு சொம்பை தலைலே விட்டுண்டு சாப்பிடவா, ஒனக்கு பிடிச்சதாத்தான் தளிகை பண்ணியிருக்கேன்! என்று. 

நானும் அவள் சொன்னதை அக்ஷரம் பிசகாமல் செய்து முடித்து சந்தியாவந்தனத்தையும் அதே கதியில் பூர்த்தி செய்து பெருமாள்உள் வாசலில் நேப்பாளி கூர்கா இரவில் பாரவுக்கு வருவது போல நம் சம்ப்ரதாய ஸலாம் அடித்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தேன்.

சூடான பலாக்கொட்டை போட்ட பருப்புக்குழம்பு, கீரை மசியல், மணத்தக்காளி வத்தல் மற்றும் மிளகு ரசத்துடன் சாப்பட்டை ஒரு பிடி பிடித்தேன். எப்போதும்  நானும் அம்மாவும் சாப்பாட்டுக்கடையை முடித்துக்கொண்டு பின் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே ஊர் நடப்பை அலசுவது வழக்கம். அன்றும் அவ்வாறே! எங்கள் சம்பாஷணை ராத்திரிக்கு என்ன சமயல்பண்ணி சாப்பிடலாம் என்ற ஒரு கேள்வி எழுப்பி அடைமாவு அரைத்து வைத்திருந்ததால் அதயே மெனுவாக தேர்ந்தெடுத்ததுடன் முடிவடைந்தது. வீடு இப்பொது களைகட்டியிருந்தது.

எங்கள் வீட்டைப்பற்றி உங்களுக்கு சில செய்திகள் சொல்லி ஆகவேண்டும். அது ஒரு ஆறு கட்டு வீடு. முன்பக்கத்தில் இரண்டு திண்ணைகள், வாசல்கதவு அதையும் தாண்டி உள்ளே வந்தால் நடையின் ஒரு பக்கத்தில் சிறு திண்ணை. மறுபக்கம் மரத்தூண்கள் தாங்கிய கூரையுடன் ரேழி, அங்கிருந்து தான் பெரிய அய்யங்கார் ஜவுளிக்கடை இயங்கியது. இந்த ரேழி தாழ்வாரத்தின் மூலம் உள் கூடத்துடன் இணைந்து அதன் பின் தளிகை உள் எனப்படும் சமயல் அறையில் முடிவடையும். தளிகை உள்ளின் ஓரத்தில் பெருமாளுக்கென்று ஒரு அறை, உள் கூடத்தில்தான் ஊஞ்சல். தாழ்வாரத்தின் பக்கவாட்டில் திறந்த முற்றம், அதில் ஒரு மல்லிகை கொடியின் பந்தல், துளசிமாடம், ஜகடை சகிதம் ஒரு கிணறும் உண்டு.

அதன் பின் பின்கட்டை இணைக்க ஒரு நடை அதையும் தாண்டி பட்டுநூல் சாயம் பூசும் சாய அடுப்பு அதுவே விசேஷ காலங்களில் கோட்டை அடுப்பாகவும் உருவெடுக்கும். இதைக் கடந்தால் மாட்டுக்கொட்டகை இரண்டு வரிசைகளில் மாடுகள் கட்டப்பட்டு நடுவில் ஒரு முற்றம் அதில் ஒரு வைக்கோல் போர், இதுவரை வீட்டின் கட்டுமானம் இதைத்தாண்டினால் வண்டிக்கொட்டகை மற்றும் தோட்டம். இந்தத்தோட்டம் பின் தெருவில் முடிந்துவிடும்!

அப்போதெல்லாம் கரண்ட்கட்டு உண்டு, அதனால் ராத்திரி சாப்பாட்டை முடித்துக்கொண்டு வீட்டில் உள்ளோர் முற்றத்திற்க்கு குடியேறிவிடுவோம். சிலசமயங்களில் சாப்படே அங்குதான். பாட்டி மோர்சாதத்தை பிசைந்து அதிலேயே மெந்தியக்குழம்பையும் விட்டு மாவடுவுடன் எங்கள் கைகளில் போட்டுவிடுவார், நாங்கள் நிலா வெளிச்சத்தில் அதை ருசித்து சாப்பிடுவோம்!   

ஜவுளிக்கடையில் நிறைய பேர் வேலைபார்த்தனர் அவர்களில் சிலர் கிருஷ்ணைய்யர், பெரிய குப்பு, சின்ன குப்பு, வெங்கட்ராமன் ஆகியோர். தவிர வந்துபோவோரும் பலர் உண்டு. அவர்களில் வித்யாசமான பெயர்கொண்டவரும் சிலர்,  புலி கிருஷ்ணையர், செங்கோடை, சின்னக்காவடி போன்றோர்.

நெசவாளர்கள் பட்டு நூல் மற்றும் ஜரிகை வாங்கிப்போக குழுமி இருக்கும்போது அந்த இடம் மினி கடைத்தெருவைப்போல் களை கட்டியிருக்கும்!

Saturday, January 23, 2016



பூர்வீகம்.

ஸ்வாமீ உமது பூர்வீகம் என்ன? என்ற கேள்வி என்னை என் கிரமத்துக்கு கொண்டு சென்றது. 

காலையில் என் மனைவி கொடுத்த காப்பியைக் குடித்துவிட்டு பிறகு அவசரமாகக் குளித்து சந்தியாவந்தனத்தை ஒருவாறாக இரண்டு செல்போன் கால்கள், இஸ்திரிக் காரனின் அழைப்பு, கதவிடுக்கில் ஹிண்டு பேப்பர் விழும் சத்தம் இவற்றின் நடுவில் செய்து முடித்தேன். 

பிறகு பெருமாளையும் அதே அவசரத்தில் பூஜித்து என் மனையாள் கொடுத்த ஓட்ஸை முழுங்கிவிட்டு கையில் அவள் கொடுத்த க்ருஷ்ணா ஸ்வீட்ஸ் டப்பாவில் அடைகலம் புகுந்த அரிசி உப்புமாவையும், துணி மணிகளையும் ஒரு பையில் திணித்துக்கொண்டு, செல்போன் மணிப்பர்ஸ் சகிதமாய் கோயம்பேடு சென்று கும்பகோணம் அரசு சொகுசுப்பேருந்து எனப்பெயரிடப்பட்ட பேருந்தில் அமர்ந்தேன். 

அன்று அதிக வெய்யில் இல்லை, பேருந்தும் புறப்பட்டது.
என் பயணம் ஒரு இசைப்பயணமாகவே இருந்தது. பேருந்தில் இருந்த எல்லா உறுப்புகளும் வலையப்பட்டி அவர்களின் தவிலை மிஞ்சி தங்கள் நாதத்தை எழுப்பின! 

நடத்துனரும் என்னிடம் பணம் பெற்றுக்கொண்டு டிக்கெட்டை ருசி பார்த்து என்னிடம் கொடுத்தார்.

நானும் கண்ணை மூடி கீதையில் கண்ணன் கூறியபடி ஐம்பொறிகளை அடக்கி மனத்தை ஒருநிலைப்படுத்த முயற்சித்தேன்! அப்போதுதான் நடத்துனர் ஒளிக்காட்சிப்பெட்டியில் ஒரு விசிடியை நுழைக்க அது தன் வயதான காலத்தில் முடிந்தமட்டும் ஒலியையும் ஒளியையும் ஏதோ ஒரு விகிதத்தில் கலந்து கொடுத்தது. 

சிவாஜி ஒரு பேய்படத்தில் நடித்தால் இப்படித்தான் இருந்திருக்குமோ? அதையும் சக பயணிகள் கழுத்து வலியுடன் முயன்று பார்த்தனர்.

நேரம் ஓடியது, சாப்பாட்டு நேரமும் நெருங்கியது, ஓட்டுனர் சாலையோர சிற்றுண்டிச்சாலையில் பேருந்தை நிறுத்தினார். 

ஒலிபெருக்கி கானாப்பாட்டை ராட்சத ஸ்பீக்கர்கள் மூலம் எல்லாப் பேருந்துகளுக்கும் சப்ளை செய்தது.   

சக பயணிகள் மூக்கைப்பிடித்துக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கி பரோட்டா செய்யும் நபரின் இசை வந்த திசையை நோக்கி நகர்ந்தனர். 

பசியாறிய பயணிகள் தமது இருக்கைகளுக்குத் திரும்பினர், ஓட்டுனரும் அவரது சகாவும் கையில் பார்சலுடன் வாயில் புகையுடனும் அவர்களின் அலுவலக நடப்புகளை அலசினர். 

பின்பு வாயிலிருந்த துண்டு நெருப்பை கீழே போட்டு காலால் அதை அணைத்துவிட்டு டெண்டுல்கர் பௌண்ட்ரி அடித்துவிட்டு அரங்கத்தை சுற்றிபார்ப்பது போல் பயணிகளைப் பார்த்துவிட்டு இருக்கையில் அமர்ந்து ஹாரனை பலமுறை அழுத்தி வண்டியை நகர்தினார். 

அதுவரை சுற்றுச்சூழலில் மூழ்கியிருந்த சில பயணிகள் அவசரமாக ஓடிவந்து அமர்ந்தனர். வண்டியும் கும்பகோணம் நோக்கி பயணித்தது. 

செவ்வாய் கிரகத்துக்கே செல்லும் இன்னாளில் ஏழுமணித்துளிகளுக்கு மேல் பயணித்து ஒருவாறாக கும்பகோணம் பேருந்து நிலையத்தை அடைந்தேன், திருமழிசையாழ்வார் காவிரியையும் அதன் கரையிலுள்ள சோலைகளையும், பறவைகளின் ஓசைகளையும் விவரித்தது என் மனத்திரையில் நிழலாடியது. 

ஆனால் எனது நாசியோ அதை மறுத்தது. நானும் முடிந்தவரை மூச்சை அடக்கி பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறினேன். இல்லை நிச்சயமாக இது அந்த திருக்குடந்தையாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. 

தண்ணீர் இல்லாத கவிரி, சோலைகள் இல்லாத நகரம், மற்றும் பறவைகளில் காகங்கள் மட்டுமே குடந்தையில் எஞ்சியது போலும்! மனிதன் இயற்கையை ரசித்த காலம் போய் கடைகளில் ஏறி இறங்கி ஓய்ந்து போனானோ? 

காவிரி நீரைப்பருகியவன் இன்று குப்பியில் அடைத்த தண்ணீரை பன்னாட்டு நிருவனத்திடம் பெற்று தாகம் தீர்ந்து போனான். சுவற்றில் ஒரு சுவரொட்டி உழைப்பவனை களைப்படைந்தால் அஞ்சால் அலுப்பு மருந்து சாப்பிடச்சொல்லி ஊக்கமளித்தது!

அப்போதுதான் ஒருவர் என்னை நெருங்கி என்ன ஸார் ஊருக்கு புதுஸா? இங்கே நிறைய கோவில் இருக்கு, நவகிரக கோவில்கள் பேமஸ் போய் பாருங்க என்று ஓசி அட்வைஸ் கொடுத்தார். 

ஆராவமுதனின் ஊர் அல்லவோ இது! மீண்டும் ஆழ்வாரை குடந்தைக்கு அழைக்க வேண்டும், அவரால் மட்டுமே குடந்தையை மீட்டு நாரணனிடம் கொடுக்க இயலும். நடக்குமா?  

சாலையில் இறங்கி வேகமாய் நடக்க ஆரம்பித்தேன். சாலையின் இருமருங்கிலும் தமிழ்மொழியின் சாயலே இல்லாத பெயர்ப்பலகைகள் ஒளிவெள்ளத்தில் கண் சிமிட்டின! 

அப்போது தான் திரு சாரங்கபாணிசுவாமி கோயில் செல்லும் வழி என்ற பெயர்ப்பலகை என் கண்ணில் பட்டது. பக்கத்திலேயே பிரும்மாண்டமான போஸ்டர் “கலியுகதெய்வமே! மழையினில் மக்களைக் காத்த கரமே! என்று முழங்கிக்கொண்டிருந்தது. 

எல்லாக்கோயில்களும் வண்ணப்பூச்சில் மகாமகத்தையொட்டி மேக்கப் செய்துகொண்டிருந்தன. பெரிய அறிவிப்புப்பலகைகள் திருப்பணிக்கு ஆன செலவை பட்டியலிட்டன! இதேபோல் அரங்கனுக்கு மன்னர்களும், அவனது அடியார்களும் செய்த திருப்பணிகளை பட்டியலிட்டால், திருவரங்கமே நிறம்பிவிடுமே! ஆனால் அக்காலத்தில் ஊடகம் மற்றும் விளம்பரத்திற்கு தனியான கல்லூரி படிப்பு இல்லையே! அதனால் தான் அவர்கள் இவ்வாறு பல பட்டியல்கள் இடவில்லையோ மாறாக கோவில் சுவற்றுக்கற்களில் பதித்தனரோ? 

 ஒருவழியாக கோயில் வளாகத்தை அடைந்தேன். என்னை எதிர்கொண்டது இன்றைய அரசு செயல்திட்ட அன்னதானத்தின் உபயதாரர் பெயர் பட்டியல் மற்றும் மெனு! திருமங்கை மன்னனும் ஒவ்வொரு நாளும் ஆயிரம் வைணவ அடியார்களுக்கு உணவிட்டாரே!

யார் அவர் பெயரை எழுதிவைத்தனர்? 
போகட்டும் அது அந்தக்காலம்! உள்ளே ஆராவமுதனை கண்ணாரக்கண்டு மனம் குளிர்ந்து அவன் உடன் உறை கோமளவல்லியையும் வணங்கி, அமுதனுக்கு ஆரவாரமில்லாமல் அழகிய திருக்கோயில் எழுப்பிய அரசர்களையும், அடியார்களையும் மனத்தால் வணங்கி பிரிய மனமிலாமல் வெளியே நடந்தேன்.

To be continued......